elugai

வீரம் சிந்தனையில் பிறக்கிறது - சுபா. முத்துகுமாரின் அழியா வரலாறு

சுபா. முத்துகுமார்: தமிழர் வரலாற்றுப் பெருமிதம்

சுபா. முத்துகுமார்: தமிழர் வரலாற்றுப் பெருமிதம்

நிலவரம் (நடுகல் நாயகர்)
தமிழீழ தேசியத்தலைவரின் தனிப்பாதுகாப்பு அணிக்கு தேர்வாகி களப்பணியாற்றிய காப்பரன் சுபா. முத்துகுமாருக்கு (பிப்ரவரி 15,) வீரவணக்கம்.

முத்துகுமார் தூக்கிய ஆயுதத்தை விட அவன் சிந்தனை பேராபத்து என்று உணர்ந்தவர்கள் தான் அவனை சிதைத்திருக்கிறார்கள். தமிழீழ விடுதலை தமிழினத்திற்கு எவ்வளவு அவசியமோ, தமிழக விடுதலையும் அத்துனை அவசியம் என்ற புரிதலுக்கு வருகிறார். அதன் தொடர்ச்சியாக தமிழ் தேசிய மீட்ச்சிப் படையில் தன்னை இணைத்துக்கொண்டு, தோழர் தமிழரசன் வழியில் ஆயுத போராட்டத்திற்கு வித்திடுகிறார். அத்தகைய மாவீரனின் வாழ்க்கை குறிப்பு இது.

சுபா. முத்துகுமார்
சுபா. முத்துகுமார் - தமிழ் தேசிய விடுதலைப் போராளி

வாழ்க்கை குறிப்பு

எழுபதுகளின் முற்பகுதியில் மதுரையில் தாயார் பார்வதிக்கும், தந்தை சுந்தரத்துக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார். தந்தையின் தொழில் காரணமாக சிறு வயதிலேயே பழனிக்கு இடம் பெயர்ந்து அங்கேயே வளர்கிறார். மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரம் ஒரு காலத்தில் பொதுவுடமை சித்தாந்தம் பொங்கி வழியும் பூமியாக இருந்தது. அதனால் ஈர்க்கப்பெற்று, சக மாணவர்கள் திரைப்பட, சாதி தலைவர்களின் ரசிகர்களாக அடையாளம் எடுத்தபோது அண்ணன் முத்துக்குமார் மணிக்கணக்கில் கார்ல் மார்க்சையும், சோவியத் யூனியனையும், மாவோவையும், சே'வையும் பற்றி பேசுவார் என்று விவரிக்கிறார்கள் அவரை சிறுவயதில் அறிந்த தோழர்கள்!

பின்னர் சிறிது சிறிதாக ஜெயவர்தனே மற்றும் அதுலத் முதலி காலங்களில் ஈழத்தில் பற்றி எறிந்த தீ மெதுவாக அவரைப் பற்றிக் கொள்கிறது. பழனியில் பள்ளிப்பருவத்திலேயே பல்வேறு அறப்போராட்டங்களை ஒருங்கிணைக்கிறார். குட்டிமணி, தங்கத்துரைகளின் படுகொலைகள், ஈகி திலீபனின் தியாகம் போன்றவை முத்துகுமாரையும் ஈழத்திற்கு நேரிடையாக அழைக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் - தேசியத்தலைவர் பிரபாகரனுடன்

ஈழப் போராட்டத்தில் பங்களிப்பு

எண்பதுகளின் பிற்பகுதியில் ஆயுத பயிற்சிக்காக தமிழீழம் சென்றார். அங்கு தேசியத்தலைவர் பிரபாகரனின் வழிகாட்டுதலோடு சிங்கள படைகளுக்கு எதிராக விடுதலை புலிகளின் பல வெற்றிகரமான தாக்குதல்களில் பங்கு பெறுகிறார். தொடர்ச்சியாக தேசிய தலைவரின் தனி பாதுகாப்பு அணிக்கு தேர்வு செய்யப்பெற்று பணியாற்றுகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகம் திரும்புகிறார்.

தமிழகத்தில் தமிழ் தேசிய விடுதலைக்காக தமிழ் தேசிய மீட்ச்சிப்படையை தலைமையேற்று வழிநடத்துகிறார். அத்துடன் தமிழ் ஈழ விடுதலைக்காக புலிகளுக்கு தேவையான அனைத்தையும் தொடர்ச்சியாக வேதாரணியம் கட்டுமாவடி, மணமேல்குடி பகுதிகளிலிருந்து அனுப்பி வருகிறார்.

தமிழீழ பெண் போராளிகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள்

வேலூர் சிறை சுரங்கப்பாதை

தலைவர் பிரபாகரனின் தனிப்பாதுகாப்பு அதிகாரி ரோமியோ மற்றும் நான்கு பெண் போராளிகள் உட்பட பதினாறு போராளிகளை வேலூர் சிறையில் இருந்து தப்ப வைக்கும் பொறுப்பு முத்துகுமாரிடம் வழங்கப்படுகிறது. இப்போது அறிவியல் தொழில்நுட்ப வசதிகளுடன் ஹாலிவுட் திரில்லர்களில் வரும் காட்சிகளைப்போல உலகே வியக்கும் வண்ணம் புலிகள் வேலூர் கோட்டையிலிருந்து நீண்ட நெடிய சுரங்கம் தோண்டி தப்புகிறார்கள்.

அவர்கள் உட்பட 43 போராளிகளை மிகக்கடுமையான மத்திய காவல் மற்றும் புலனாய்வுத்துறையின் கண்காணிப்புக்கு நடுவே கல்யாண வீட்டார் போல உருமாற்றி (பாவனையில்) தமிழகத்தில் இருந்து தப்ப வைத்து விடுகிறார் முத்துக்குமார்.

அவரின் சாதுர்யமும், சாமார்த்தியமும் பல போராளிகளையும், புலித்தலைமையையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

சிறை வாழ்க்கையும் போராட்டமும்

பின் ஒருமுறை மணமேல்குடியில் விடுதலை புலிகளுக்கு அனுப்ப பொருட்களுடன் காத்திருந்த போது கைது செய்யப்பட்டு தடா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பெற்றார். இரண்டரை ஆண்டுகளுக்கு பின் பிணையில் விடுதலை ஆகி தலைமறைவாகிறார். போராட்டம் சந்தனக்காட்டில் புதிய பரிமாணம் எடுக்கிறது. வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தை வீரப்பனாருடன் சேர்ந்து தலைமையேற்று தாக்குதல் நடத்தி ஆயுதங்களை அள்ளிச்சென்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கோவை சிறையில் சிறைப்படுத்தப்பட்டார். கன்னட சூப்பர் ஸ்டார் கடத்தல் திட்டத்தை சிறையிலிருந்தே வகுக்கிறார். அந்த கடத்தல் வீரப்பனார் ஒப்புதலோடு தோழர்களால் செவ்வனே முடிக்கப்பெருகிறது.

தமிழர்களின் சீவாதார பிரச்சினைகளான காவிரிநீர், பெங்களூரில் பல ஆண்டுகளாக திறக்கப்படாது மூடி கிடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு, மலைவாழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம், மற்றும் போராளி முத்துக்குமார் விடுதலை போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது. அதனால் பிறகு சிறையிலிருந்து பிணையில் வருகிறார்.

அரசியல் பயணம்

ஐயா பழ. நெடுமாறன் அவர்களுடன் சனநாயக அரசியலில் நெருக்கமாக ஈடுபடுத்தி கொள்கிறார், பின் மீண்டும் ஒன்றரை ஆண்டு காலம் கழித்து வீரப்பனாருக்கு பொருட்களை கொண்டுசென்றதாக அண்ணன் கொளத்தூர் மணியுடன் கூட்டு அதிரடிப்படையால் கைதாகி கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கன்னட சிறையில் அடைக்கப்படுகிறார். நான்கரை ஆண்டுகாலம் சிறைவாழ்க்கை, பின் மீண்டும் பிணையில் வருகிறார்.

மெல்ல மெல்ல ஈழத்தில் போர் உச்சத்தை எட்டுகிறது. தமிழ் தேசிய ஜனநாயக அரசியலில் தீவிரமாகிறார். தொடர்ந்து இயன்ற வழிகளில் எல்லாம் புலிகளுக்கு தேவையானவற்றை அனுப்புகிறார். ஈழம் மெல்ல மெல்ல அழிகிறது!

ராமேஸ்வரம் பிரச்சினையில் மதுரையில் பிணை இடுவதற்காக தங்கி இருந்த சீமானை சந்தித்து தனி தீவிர போர்க்குண அரசியல் பாதையை ஊக்குவிக்கிறார். தோழர்களுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் அந்த பகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் சிதம்பரத்தை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தோற்கடிக்கிறார். மதுரையில் முள்வேலி தகர்த்தெறிவோம் மாநாட்டை தோழர்களுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தினார்.

சீமான்
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்

நாம் தமிழர் கட்சியில் பங்களிப்பு

நாம் தமிழர் கட்சி பணிகளை தொடங்கி முழுமூச்சுடன் ஈடுபடும் வேளையில் புதுக்கோட்டை பெரியார் திராவிடர் கழக மாவட்ட பொறுப்பாளர் கரு. காளிமுத்து அவர்களின் புதல்வி மாதரசியை சாதி மறுப்பு மணம் முடிக்கிறார். நாம் தமிழர் கட்சியின் கொடி அறிமுகம் தஞ்சையில் முடித்து திரும்பும் வழியில் ஈழத்திற்கு மருந்துகள், ரத்த பைகள் மத்திய புலனாய்வு காவல்துறை அதிகாரி ஜாபர் தலைமையிலான குழுவால் கைது செய்யப்படுகிறார்.

ஒன்றரை மாதம் கழித்து வழக்கை உடைத்து வெளிவந்து நாம் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக பம்பரமாய் சுழன்ற அவர், அந்த பகுதிகளில் பல தமிழீழ உணர்வுள்ள இளைஞர்களை வளர்த்தெடுக்கிறார்! இவருடைய காலம் இதுவரையான நாம் தமிழர் வரலாற்றில் புதுக்கோட்டை, காரைக்குடி, தென் தஞ்சை மாவட்டங்களின் பொற்காலம் எனலாம். அதுபோல் ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களையும் தன் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் வளர்த்தெடுத்தார்.

வீரச்சாவு

அத்தகைய செயற்தளபதி சுப முத்துக்குமார் புதுச்சேரி நகரின் மத்தியில், அண்ணா சிலை அருகே மர்ம நபர்களால் (பிப்ரவரி 15, 2011 அன்று கயவர்களால் வெட்டி வீழ்த்தப்பட்டார்.) இந்த பாதகத்தை செய்தது அரச பயங்கரவாதமா என்பது சிவகங்கை தொகுதியை உள்ளடக்கிய புதுச்சேரி மாவட்டத்தின் 'சிதம்பர ரகசியம்'!

தலைவர்களின் நினைவுகள்

அவரின் இறுதிச்சடங்கில் பங்கு பற்றி வீரவணக்க இரையாற்றிய அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள், என்னால் முத்துகுமார் பல நேரங்களிலும், அவனால் நான் பல நேரங்களிலும் சிறைவாசம் அனுபவித்திருக்கிறோம் என்றும் முத்துக்குமார் எனது சிறைத்தோழன் என்றும் சொன்னது அவரைப் பற்றிய முத்தாய்ப்பாய் அமைகிறது.

அப்போது பேசிய ஐயா நெடுமாறன், முத்துகுமாரின் வீர தீரங்களை தாண்டி, எனக்கே சில நேரம் விளங்காத அரசியல் முடிச்சுக்களை அவிழ்ப்பதில் வல்லவன் முத்துகுமார் என்றார். சீமான் பேசும்போது, நான் சமகாலத்தில் சந்தித்த மிகச்சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவன் முத்துக்குமார், அவன் எனக்கு அரசியல் ஆசான் என்றார்.

போராளிகள் உருவாக்கப்படுவதில்லை, போராளிகளாகவே பிறக்கிறார்கள். அந்த சொல்லுக்கு இலக்கணமாக திகழ்ந்த செயல்வீரன் தான் சுப முத்துக்குமார். அந்த உன்னதமான மாவீரனின் புகழ் தமிழர் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

Post a Comment

0 Comments