இரட்டை வேடம் போடும் அனுர அரசு: தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தொடரும் ஏமாற்றங்கள்!
- கபில்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் விடயத்தில், இரட்டை வேடம் போடுகிறது என்பது தெளிவாகியிருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதற்கு மாறான தீர்மானங்களை எடுப்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வழக்கமாகி விட்டது.
வாக்குறுதிகளை மறக்கிறதா தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்?
இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதி, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது என நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் பட்டியல் நீளமானது. தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கைப்பற்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கின்ற விகாரை, இப்பொழுது பேசுபொருளாகியிருக்கிறது.
இந்த விகாரை விடயத்தில் அரசாங்கம் எடுத்திருக்கின்ற தீர்மானம், காணிகளின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடப்படாமல் மேற்கொள்ளப்பட்ட ஒன்று. குறித்த விகாரை அகற்றப்படாது, அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு மாற்றுக்காணி வழங்கப்படும் அல்லது இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் சந்திரசேகர் கூறியிருக்கிறார். இது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் ஏமாற்றமாகும்.
தையிட்டி விகாரை: சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு அங்கீகாரமா?
தையிட்டி விகாரை விவகாரம்: தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் அபகரிப்பு
கடந்த ஆட்சியில் சட்டத்துக்கு முரணாக சொத்து சேர்த்தவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், சட்டவிரோத கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன. ஆனால் கடந்த ஆட்சியில் சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு மாத்திரம் இந்த அரசாங்கம் விதிவிலக்கு கோருவது ஏன்? நயினாதீவு நாகதீப விகாரையின் விகாராதிபதியே இந்தக் காணிகள் பொதுமக்களுக்குரியவை என்று ஒப்புக்கொண்ட பின்னரும், அரசாங்கம் உரிமை தொடர்பாகக் கேள்வி எழுப்புவது அபத்தமானது.
பலாலி விமான நிலையம்: முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள்
அமைச்சர் சந்திரசேகர் குழப்பத்தை ஏற்படுத்துவது இது முதல்முறையல்ல. பலாலி விமான நிலையம் நட்டத்தில் இயங்குவதாக அவர் கூறுகிறார். ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பலாலி விமான நிலையம் கோடிக்கணக்கான ரூபாய் இலாபத்தில் இயங்குவதாக நாடாளுமன்றத்தில் புள்ளிவிபரங்களை வெளியிட்டிருந்தார். 2022 முதல் 2025 வரை இலாபமீட்டிய ஒரு நிலையத்தை நட்டத்தில் இயங்குவதாகக் கூறி அதன் அபிவிருத்தியை தடுத்திருப்பது ஏன்?
பலாலி விமான நிலைய அபிவிருத்தியில் நிலவும் அரசியல் முரண்பாடுகள்
தையிட்டி விவகாரம் தீர்க்கப்படாமல் இருக்கையில், வவுனியாவில் கல்லுபிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரையை கட்டுகின்ற நடவடிக்கைகள் தொல்பொருள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படுகின்றன. குருந்தூர்மலையில் நடந்த அதே அடாவடித்தனம் இங்கும் அரங்கேறுகிறது. தெற்கில் பல விகாரைகள் பராமரிப்பின்றி அழியும் போது வடக்கில் மட்டும் விகாரைகளை கட்டுவதற்கு அரசாங்கம் முனைவது ஏன்?
தற்போதைய அரசாங்கத்திலும், தொல்பொருள் செயலணி முற்றிலும் சிங்களவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட போதே, அதன் உண்மையான நிகழ்ச்சி நிரல் வெளிப்பட்டு விட்டது. தமிழ் மக்களுக்கு விரோதமான நிகழ்ச்சி நிரலில் தொடர்ச்சியாகவே இவை இடம்பெறுகின்றன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமத்துவமான ஆட்சியை நடத்துவதாகக் கூறிக்கொண்டாலும், அதன் இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களின் உரித்துகளையும், உரிமைகளையும் இல்லாமல் செய்யும் நோக்கம் கொண்டவை என்பது வெளிப்படையாகிறது.
0 Comments