காவிகளுடன் முரண்படும் என்பிபி
மகா சங்கத்தினருடன் மோதத் தொடங்கியுள்ள அரசாங்கம் - ஒரு அரசியல் அலசல்
பதவிக்கு வந்து 15 மாதங்களுக்குள், என்பிபி அரசாங்கம் மகா சங்கத்தினருடன் மோதத் தொடங்கியிருக்கிறது. இது அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற ஒரு முக்கியமான சவால். மகா சங்கத்துடன், பௌத்த மத பீடங்களுடன் முரண்பட்டுக் கொண்ட ஆட்சியாளர்களால், நீண்ட காலத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாது. இது வரலாற்று ரீதியான உண்மை.
படம்: இலங்கையின் அரசியல் தீர்மானங்களில் பௌத்த மத பீடங்களின் செல்வாக்கு
இடதுசாரிகள் எப்போதும் மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. அந்த வகையில் ஜேவிபினருக்கும் பௌத்த மத பீடங்களுக்கும் நெருக்கமான உறவுகள் இருந்ததில்லை. ஆனால் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைக்க வேண்டுமானால் அத்தகைய உறவுகள் தவிர்க்க முடியாதவை. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஜேவிபி பல விடயங்களில் நெகிழ்வுப்போக்குகளைக் கையாண்டிருக்கிறது.
ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும், அநுர குமார திசாநாயக்க பௌத்த மத பீடங்களுடன் நெருங்கிய உறவைக் கட்டியெழுப்பத் தொடங்கினார். அடிக்கடி கண்டிக்குப் பயணம் செய்து, மகாநாயக்கர்களுடன் சந்திப்புகளை நடத்தினார். அவர்களின் ஆலோசனைகளின் படியே முடிவுகளையும் எடுத்தார். அந்த நிலை இப்போது மாறத் தொடங்கியிருக்கிறது.
கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பாடத்திட்டத்தில் மேற்கொண்ட மாற்றங்கள் சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றன. ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்தில் பொருத்தமற்ற இணைய இணைப்பு சேர்க்கப்பட்டது நியாயப்படுத்த முடியாதது. இது அரசாங்கத்திற்கு ஒரு தோல்வியான நகர்வு.
படம்: கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் பாடத்திட்ட சர்ச்சைகள்
பிரதமரைப் பாதுகாக்கும் வகையில் கருத்து தெரிவிக்க முயன்ற அமைச்சர் லால்காந்த, மிகிந்தலை விஹாராதிபதியைக் காட்டுமிராண்டி என விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது மகா சங்கத்திற்கு ஏற்படுத்தப்பட்ட அவமதிப்பு என்று பௌத்த பிக்குகள் கொதித்து எழுந்திருக்கிறார்கள்.
லால்காந்த மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவருக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இது அரசாங்கத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பௌத்த பிக்குகள் போர்க்கொடி உயர்த்துகின்றனர்.
மகா சங்கத்தில் பல பிரிவுகள் இருந்தாலும், அரசியல் ரீதியாக பிளவுபட்டுக் காணப்பட்டாலும், ஜேவிபிக்கு எதிராக பௌத்த பிக்குகள் அணி திரளத் தொடங்குவது சாதகமான அறிகுறியல்ல. பௌத்த பிக்குகள் கட்டி எழுப்புகின்ற எதிர்ப்பு அரசியல் எப்போதுமே வீரியமானதாக இருந்து வந்திருக்கிறது.
எனவே, ஹரிணி அமரசூரிய விவகாரத்திலோ, லால்காந்த விவகாரத்திலோ அரசாங்கத்துக்கு எதிராக மகாசங்கத்தினர் அணி திரளுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது அரசாங்கத்துக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கை. இதனை அலட்சியம் செய்தால் ஆபத்தான விளைவுகள் தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.
0 Comments