தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகள்
காதல், வீரம், விருந்தோம்பல் என உலகமே வியக்கும் தமிழரின் வாழ்வியல்
இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி. பாவாணர் கூறுவது போல, பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம், நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. முன்னது ‘அகக்கூறு‘ பின்னது ‘புறக்கூறு’. நாகரிகம் தேர்ந்த பண்பாடுண்டு, நாகரிகம் இல்லாத பண்பாடுமுண்டு. தமிழர் பண்பாடு இவ்விரண்டிலும் சமச்சீர்த்தக்கது.
தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது. தான் தோன்றிய கால மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அரசு, அமைச்சூர், ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றை நமக்குக் காட்டி நிற்கின்றன.
படம்: சங்க காலத் தமிழரின் வாழ்வியலையும் கலையையும் பிரதிபலிக்கும் காட்சி
தமிழர் பண்பாடு ஒரு இயங்கியல் பண்பாடு. இதன் அமைப்பொழுங்கு இரண்டு அம்சங்களைக் கொண்டது. ஒன்று, அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவத்தைத் தரக்கூடிய ‘புறக் கூறுகள்’ பண்பாடு சார்ந்தும், அவற்றின் ‘அகக் கூறுகள்’ உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்.
பண்டைய தமிழர்களின் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக்கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன.
வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன.
மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதனை விட எப்படி வாழக் கூடாது என்று வாழ்வியலைக் கற்றுக் கொடுத்த தமிழரின் பண்பாட்டு அடிச்சுவடுகள் இன்றும் உலகம் முழுவதிலும் தடம் பதித்து இருக்கின்றன. உயர்ந்த சிந்தனைகளையும், உயர்வான எண்ணங்களையும் சமூகம் எனும் மணற்பரப்பில் விதைத்துச் சென்றிருக்கிறது தமிழினம்.
நாடாண்ட மன்னன் முதல் குடில் வாழும் சாதாரண குடிமகன் வரை குலம் காக்கும் பண்பாட்டைக் கட்டிக் காத்து பார் போற்ற வாழ்ந்த இனம் தமிழினம். நாகரீகம் என்ற பெயரில் தலைமுறை கடந்தாலும் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் வாழ்வியலின் ஒவ்வொரு தளத்திலும் பின் தொடர்ந்து வருகிறது.
0 Comments