உணர மறுக்கும் தமிழினம்..
ஆபத்துக்கள் நிறைந்த கிவுல் ஓயா திட்டம் - பாகம் 2
'வடக்கில் குடிப்பரம்பறையை மாற்றியமைக்கும், திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் ஒதுக்கக் காடுகள் மற்றும் தொல்பொருளியல் பகுதிகளை அழித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது முன்னெடுக்கப்படவுள்ள இனம் சார்ந்த நீர்பாசனத்திட்டம்'
மகாவலி அதிகார சபையினால் வடமாகாணத்தின் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மகாவலி கங்கையின் நீரைக் கொண்டு செல்வதை இலக்காக வைத்து 'மகாவலி-எல்' வலயத்திட்டம் முன்மொழியப்பட்டது. இது, உட்கட்டமைப்பு, அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் வடமாகாணத்தில் குடிப்பரம்பறையை மாற்றியமைக்கும் உள்நோக்கத்தினை கொண்டது என்பதை வெளிப்படையாக உணரப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டன.
போரின் பின்னரான சூழலில் 'மகாவலி-எல்' வலய விஸ்தரிப்புக்களுக்கான முயற்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்னெடுக்கப்பட்டபோதும், மக்கள் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அந்த முயற்சிகள் முழுமையாக வெற்றியளித்திருக்கவில்லை.
திட்டத்தின் விபரம்
வவுனியா மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உற்பத்தியாகி, முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்க்குச் செல்லும் 'மா ஓயா'வின் பிரதான கிளை நதியே கிவுல் ஓயா. இந்தக் கிவுல் ஓயாவை மையப்படுத்தி அணையைக்கட்டுவதன் மூலமாக, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விவசாயத்துக்கான நீர் மற்றும் குடிநீர் வசதியை ஏற்படுத்த முடியும் என்று மகாவலி அதிகார சபை முன்மொழிந்து இந்த திட்டத்தினை வடிவமைத்துள்ளது.
இத்திட்டத்தில், நீர்ப்பாசன உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 6230 மில்லியன் ரூபாவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 832 மில்லியின் ரூபாவுமாக, மொத்தம் 7062 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
தீவிரமடையும் குடிப்பரம்பல்
இத்திட்டத்தில், ஏற்கனவே குடியேற்றப்பட்டுள்ள 4,372 குடும்பங்கள், மற்றும் புதிதாக குடியேற்றப்படவுள்ள 1626 குடும்பங்களென மொத்தமாக 6000 விவசாயக் குடும்பங்கள் நேரடிப் பயனாளிகளாகவும், 50 ஆயிரம் பேர் குடிநீரைப் பெறும் பயனாளிகளாகவும் இருப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தத் திட்டத்தின் ஊடான பயனாளிகள் அனைவரும் 1983-இன் பின்னர் குடியேற்றப்பட்ட 'சிங்கள' விவசாயிகளாக இருக்கின்றார்கள் என்பதும், ஒரு குடும்பத்திற்கு தலா 1.17 மில்லியன் ரூபா நீர்வழங்கல் வசதிக்காக மட்டும் செலவிடப்படவுள்ளமையும் வெளிப்பட்டுள்ளது.
மாயமாகும் நிலையில் தொல்பொருள் பகுதிகள்
கிவுல் ஓயா நீர்பாசனத் திட்டம் முழுமைப்படுத்தப்படும் பட்சத்தில் அப்பகுதியில் உள்ள வரலாற்று இடங்கள், இந்து, பௌத்த மடாலய தளங்கள், மட்பாண்டங்கள் மற்றும் தளங்கள், பிற தொல்பொருள் இடங்கள் உள்ளிட்டவைக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படவுள்ளன.
குறிப்பாக, வலயம்-'ஏ'இல் 9 இடங்களும், வலயம்-'பி'இல் 17 இடங்களும், வலயம்-'சி'இல் 19 இடங்களும், வலயம்-'டி'இல் 2 இடங்களுமாக மொத்தம் 47 தொல்பொருளியல் இடங்கள் முறையாக பராமரிக்க முடியாமலும் சில நீரினுள் மூழ்கி அடையாளமே தெரியாது போவதற்கும் சாத்தியங்களும் அதிகமுள்ளன.
வெள்ளத்தால் மூழ்கப்போகும் கிராமங்களும் குளங்களும்
கிவுல் ஓயா திட்டம் முற்றுப்பெறும் பட்சத்தில், காட்டுப்பூவரங்குளம், வெடிவைத்தல்லு, மருதோடை, காஞ்சிரமோட்டை, கூழாங்குளம் ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. குறிப்பாக, காட்டுப்பூவரங்குளத்தில் 430 ஏக்கர்களும், வெடிவைத்தல்லில் 475 ஏக்கர்களும் வெள்ள அபாயத்தில் உள்ளன.
கருத்திற்கொள்ளப்படாத சுற்றுச்சூழல் பாதுகாப்பு
தொகுத்துப்பார்க்கையில், இத்திட்டத்தினால் சுமார் 2500 ஹெக்டேயர் காடுகள் அழிந்துவிடும் என்று சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் 1500 ஹெக்டேயர் அளவிலான வாழ்விடத்தினை வனஜீவராசிகள் இழப்பதால் மனிதன்-யானை மோதல் தீவிரமடையும்.
திட்டப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த 88 தாவர இனங்களில் இரண்டு தேசிய அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளானவை. அத்துடன், பதிவுசெய்யப்பட்ட 214 விலங்கு இனங்களில், 14 உள்ளூரைச் சேர்ந்தவையாக இருப்பதோடு நான்கு இனங்கள் உலக அளவில் ஆபத்துக்குள்ளானவையாகவும் உள்ளன.
ஆகவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்துகின்றபோது இத்திட்டத்தின் நேர்மறையான முடிவுகளை விடவும் எதிர்மறையான தாக்கங்களே அதிகமாக இருக்கின்றன. கிவுல் ஓயா திட்டத்தின் பின்னால் உள்ள நோக்கத்தையும், இலக்கையும் எவரும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகின்றதல்லவா?








0 Comments