elugai

சீனாவின் இந்தோ-பசிபிக் வியூகம்: ஈழத்தமிழர் இறையாண்மையைச் சுற்றி உருவாகும் புதிய புவிசார் அரசியல் வலை

சீனாவின் இந்தோ-பசிபிக் வியூகமும் ஈழத்தமிழர் இறையாண்மையும்

சீனாவின் இந்தோ-பசிபிக் வியூகமும் ஈழத்தமிழர் இறையாண்மையும்: பட்டுப்பாதை இராஜதந்திரமும் கல்விசார் உளவுத்துறையின் புதிய நகர்வுகளும்

கிருஸ்ணா அம்பலவாணர் (எழுகதிர் இதழ்) — பகுதி 2

— இது பகுதி 1இன் தொடர்ச்சி —

தெற்காசியப் பிராந்தியத்தில் மாறிவரும் வல்லரசுகளின் புவிசார் அரசியல் ஏகபோகப் போட்டிகளுக்கு நடுவே, ஹொங்கொங் சீனப் பல்கலைக்கழகத்தின் (சென்சென்) புதிய முதுகலை ஆராய்ச்சி அறிவிப்பு, உலகளாவிய இராஜதந்திரத் தளங்களில் ஒரு மிக முக்கியமான விவாதப் புள்ளியைத் தோற்றுவித்துள்ளது. "இலங்கைக்குள் ஒரு சுயாதீன தமிழ் அரசு உருவாக்குவதற்கு எதிர்நோக்கும் சர்வதேசச் சட்டரீதியான சவால்கள்" என்ற தலைப்பிலான இந்த ஆய்வுத் திட்டம், வெறும் கல்விசார் எல்லைக்குட்பட்ட ஒன்றல்ல. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ வெளியுறவுக் கொள்கைக் கோட்பாடுகளையும், அதன் 'ஒரே மண்டலம் ஒரே பாதை' திட்டத்தின் கடல்சார் பட்டுப்பாதை வியூகத்தை மிக ஆழமாகக் கவனிப்பவர்களுக்கு, இதன் பின்னுள்ள புவிசார் இராஜதந்திர நகர்வுகள் துல்லியமாகப் புலப்படும். கொழும்பு ஒற்றையாட்சி அரசைத் தங்களின் கடன்பொறி இராஜதந்திரத்திற்குள் முழுமையாகக் கொண்டுவந்துவிட்ட சீனா, தற்போது பிராந்தியத்தின் அடுத்த கட்டப் பலப்பரீட்சையாகத் தமிழர்களின் பாரம்பரிய நில வளங்களையும், இந்தோ-பசிபிக் கடல்சார் எல்லையில் முதன்மை பெற்றுள்ள திரிகோணமலை உள்ளிட்ட வியூகம் முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை அரண்களையும் தன் முற்றுமுழுதான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் திட்டமிடுகிறது.

Prof. Alex Green Prof. Alex Green

சர்வதேசச் சட்டங்களின் வரம்புகளையும், ஐக்கிய நாடுகள் அவையின் தன்னாதிக்கப் பிரகடனங்களையும் முன்னிறுந்துச் சீனா வடிவமைத்துள்ள இந்த ஆய்வறிவிப்பு, அடிப்படையில் ஒரு 'கல்விசார் உளவுத்துறை' மூலோபாயமாகும். ஈழத்தமிழர் தேசியக் கேள்விக்காகவும், தங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் பன்னாட்டு நீதிமன்றங்கள் மற்றும் சர்வதேசத் தளங்களில் சட்டப் போராட்டம் நடத்தி வரும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களின் தரவுகளைத் திரட்டுவது இதன் முதன்மை நோக்கமாக இருக்கலாம். இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் தரவுச் சேகரிப்பு என்ற போர்வையில், தமிழ்த் தேசிய இயக்கங்களின் சர்வதேச ராஜதந்திர உத்திகள், நிதிப் பங்களிப்பு வளங்கள் மற்றும் தத்துவார்த்தக் கோட்பாடுகள் யாவும் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டு, இறுதிப் புள்ளியில் அவை கொழும்பு மற்றும் பிராந்திய மேலாதிக்க உளவுத்துறை அமைப்புகளுக்குச் சாதகமாகச் சிக்கவைக்கப்படும் பேராபத்து இதில் ஒளிந்துள்ளது.

எனவே, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, இந்தியா, மற்றும் சீனா ஆகிய முத்தரப்பு வல்லரசுகளின் கடல்சார் வியூகங்களுக்கு மத்தியில், தமிழர்களின் உன்னதமான சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையானது ஒரு பன்னாட்டுப் பகடைக்காயாக மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டியது உலகளாவிய ஒன்பது கோடி தமிழர்களின் தார்மீகக் கடமையாகும். பன்னாட்டுச் சட்டங்களின் முரண்பாடுகளையும், வல்லரசுகளின் வர்த்தக நலன்களுக்கு ஏற்ப வளைக்கப்படும் இராஜதந்திர முகமூடிகளையும் பகுத்தறிவு அறிவியலால் தோலுரித்துக் காட்டுவது அவசியமாகிறது. எமது மாவீரர்களின் உன்னதமான உதிரத் தியாகங்களினாலும், எமது தேசியத் தலைவரின் சமரசமற்ற இலட்சியக் கனவினாலும் செதுக்கப்பட்ட தமிழினத்தின் 'தாயகம், தேசியம், தன்னாட்சி' ஆகிய அடிப்படைக் கோட்பாடுகளை இத்தகைய புவிசார் சதிவலைகளுக்குள் சிக்கவிடாமல் பாதுகாப்பதும், சர்வதேச அரங்கில் தமிழினத்தின் கூட்டு அதிகாரத்தை ஒரு சுதந்திரமான அரசியல் சக்தியாக நிலைநிறுத்துவதுமே 'எழுகதிர்' வாயிலாக நாம் உலகிற்கு விடுக்கும் சமரசமற்ற தத்துவார்த்த அறைகூவலாகும்.

Post a Comment

0 Comments