இலங்கையின் இரும்புப் பெண் இராஜதந்திரி: ஜூலி சங்!
எதிர்ப்புகளைத் தவிடுபொடியாக்கி ஜேவிபியையும் வசீகரித்த இராஜதந்திர நகர்வு
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், அமெரிக்காவின் சார்பில் 28 தூதுவர்கள் இலங்கையில் பணியாற்றி இருக்கிறார்கள். அவர்களில் ஜூலி சங் முதன்மையானவராக போற்றப்பட்டிருக்கிறார். விடைபெறுவதற்காக வெளிவிவகார அமைச்சிக்குச் சென்றிருந்த போது, கொழும்பில் பணியாற்றிய மிகவும் பிரபலமான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தான் என்று அமைச்சர் விஜித பேரத் புகழாரம் சூட்டியிருந்தார். அந்தளவுக்கு அவர் ஜேவிபியினவரையே வசீகரித்திருக்கிறார்.
பொதுவாக மூன்று ஆண்டுகள் பதவிக்காலத்துக்காகவே, அமெரிக்க தூதுவர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்கு வந்த ஜூலி சங், இன்னும் ஒரு மாதத்தில், நான்கு ஆண்டுகளை நிறைவு செய்யக்கூடிய நிலையில், கடந்த 16 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார். இலங்கையில் இதுவரை பணியாற்றிய 28 அமெரிக்க தூதுவர்களில், ஆகக் கூடுதலான காலம் பதவியில் இருந்தவர் ஜூலி சங்.
இலங்கையில் மூன்று ஜனாதிபதிகளின் பணியாற்றிய ஒரே அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தான் என்று சில தவறான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவர், கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திசாநாயக்க என மூன்று ஜனாதிபதிகளுடன் பணியாற்றியிருக்கின்ற போதும்- இவர் மாத்திரமே அப்படிப் பணியாற்றிவர் அல்ல.
1993 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி, ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாச தற்கொலைக்குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரை அடுத்து டி.பி.விஜேதுங்க பொறுப்பேற்றார். 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா குமாரதுங்க வெற்றி பெற்று ஜனாதிபதியானார். இந்த மூன்று ஜனாதிபதிகளும் பதவியில் இருந்த காலகட்டத்தில் - அமெரிக்க தூதுவராக இருந்தவர் பரபரசிட்டா கியூரி ஸ்காபர் (Teresita Currie Schaffer) அம்மையார். ஜூலி சங் அத்தகைய பெருமையைப் பெற்ற இரண்டாவது நபர் ஆவார்.
2022 ஆம் ஆண்டு, கோவிட் தொற்றுக்குப் பின்னரான சூழலில் ஜூலி சங் பதவியேற்ற போது, கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பொருளாதார ரீதியாக பலவீனப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் விளைவாக, சில மாதங்களிலேலே, அரகலய போராட்டத்தின் விளைவாக, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த ஆட்சி மாற்றத்திற்கு, ஜூலி சங் ஆதரவளித்திருந்தார்.
மத்தல விமான நிலையத்தை இந்திய- ரஷ்ய நிறுவனங்கள் கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு, முற்பட்ட போது அதனைத் தடுத்து நிறுத்தியவர் ஜூலி சங். ரஷ்ய நிறுவனம் தொடர்பாக இருக்கின்ற சர்ச்சைகளை சுட்டிக்காட்டி அவர் அந்த இணக்கப்பாட்டை தடுத்து நிறுத்தினார். அதேவேளை, இந்தியப் பெருங்கடலில் நடமாடுகின்ற சீன ஆய்வு கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வருவது மற்றும் தரித்துச் செல்வதை அமெரிக்கா கடுமையாக எதிர்த்தது.
இலங்கையில் கடும் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்ட ஜூலி சங், இலங்கையின் அரசியல் தலைவர்களால் கொண்டாடப்பட்டு, விடை கொடுக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது ஒரு முக்கியமான மாற்றம் தான். அதனை ஜூலி சங், எப்படி சாத்தியப்படுத்தினார் என்பது அமெரிக்காவினால் அடுத்து அனுப்பப்படும் இராஜதந்திரிகளுக்கு முன்னுதாரணமாகவே இருக்கும்.
0 Comments